கொள்ளையடித்த ரூ.5.78 கோடியும் பணமதிப்பிழப்புக்கு முன்பே செலவு செய்து விட்டதாக கொள்ளையர்கள் வாக்குமூலம்

சேலம் ரயிலில் கொள்ளை அடிக்கப்பட்ட  ரூ.5.78 கோடியும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பே செலவு செய்து விட்டதாக கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி சேலத்தில் இருந்து சென்னை ரயிலில் எடுத்து வரப்பட்ட ரிசர்வ் வங்கியின் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. 2 ஆண்டுகள் தீவிர விசாரணைக்கு பிறகு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 7 கொள்ளையர்களை சிபிசிஐடி போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர்.

அவர்களில் 5 பேரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை வளையத்திற்குள் உட்படுத்தினர். அதில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை என்ன செய்தார்கள் எனவும் விசாரிக்கப்பட்டது. இதனிடையே ரயிலில் கொள்ளையடிக்கப்பட்ட 3 மாதங்களில் 2016 நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே பணத்தை மாற்ற முடியாமல் எங்கேயாவது மறைத்து வைத்திருக்கிறீர்களா எனவும் விசாரித்தனர்.

ஆனால் கொள்ளையடிக்கப்பட்ட பணம் முழுவதையும் பணமதிப்பிழப்புக்கு முன்பாகவே செலவு செய்து விட்டதாக கொள்ளையர்கள் தங்களது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளனர். இதனையடுத்து தங்கமாகவோ, வேறு எந்த பொருளாகவோ மாற்றி வைத்துள்ளனரா எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *