வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள கஜா புயல் பாம்பன் – கடலூர் இடையே நாளை மாலையில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த கஜா புயல் வடமேற்குத் திசையில் நகர்ந்து, சென்னைக்கு கிழக்கே 540 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்துக்குக் வடகிழக்கே 640 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 24 மணி நேரத்தில் இது தீவிர புயலாக மாறும் என்றும், பின்னர் வலுவிழந்து நாளை மாலையில் பாம்பனுக்கும்-கடலூருக்கும் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக, நாகை, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்யக்கூடும். கடல் காற்று 100 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புயலால் சென்னைக்கு நேரடியாக பாதிப்பு ஏதும் இல்லை என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.