மத்திய தெற்கு வங்க கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில், செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இதனை தெரிவித்திருக்கிறார்.
மேலும், அடுத்த 48 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, ஆந்திரா மற்றும் வட தமிழக கரையை நோக்கி நகரக் கூடும் என்றார்.
இதன் காரணமாக, தெற்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதிக்கு, அடுத்த நான்கு நாட்களுக்கு மீனவர்கள் செல்ல கூடாது என எச்சரித்தார். ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற மீனவர்கள், நாளை மாலைக்குள் கரை திரும்புமாறும், புவியரசன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு, புதுவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்றும், மழைக்கு வாய்ப்பில்லை என்றும், வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்திருக்கிறார்..