சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் துணிக்கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. 5 மாடிக் கட்டிடத்தில் இயங்கி வரும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் 5 தளங்களிலும் துணி வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில் 4 மற்றும் 5-வது தளங்களில், தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் ஒருவர் சனிக்கிழமை மாலை தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் காவல்துறையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு வந்தனர்.
கடையில் இருந்த ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் போலீசார் வெளியேற்றிய நிலையில் கடையில் வெடிகுண்டு இருக்கிறதா என வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.