வடகொரியாவுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்கா திடீரென ஒத்திவைத்துள்ளது.
அணு சோதனைகளைக் கைவிடுதல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவுக்கும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் நம்பிக்கைக்கு உரியவர்களில் ஒருவரான கிம் யாங் சாலுக்கும் இடையே நாளை நடைபெறுவதாக இருந்தது.
இந்த சந்திப்பு வேறு ஒரு நாளில் ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹீதர் நாயெர்ட் தங்களுக்கு வசதியுள்ள ஒருநாளில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்காவிட்டால் மீண்டும் அணு ஆயுத சோதனைகளைத் தொடங்கப் போவதாக வடகொரியா எச்சரித்த நிலையில் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.