நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

மேகதாது, ரஃபேல், ராமர் கோவில் விவகாரங்களை எழுப்பி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று மக்களவை தொடங்கியதுமே எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் அவை முதலில் 10 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் அவை தொடங்கிய போது சிவசேனா உறுப்பினர்கள் ராமர் கோவில் கட்டும் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை தொடங்கிய போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி.க்கள் சபாநாயகர் இருக்கை அருகே பதாகைகளுடன் சென்று முழக்கங்களை எழுப்பினர்.

தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்களும் பதாகைகளுடன் சபாநாயகர் இருக்கை அருகே சென்று முழக்கங்களை எழுப்பினர். தொடர் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே மாநிலங்களவை தொடங்கிய போது அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு கஜா மற்றும் டிட்லி புயல் பாதிப்புகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தமிழக எம்.பி.க்களான வி.மைத்ரேயன், டி,ராஜா, கனிமொழி, திருச்சி சிவா, சி.எம்.ரமேஷ் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

அதனை அவைத் தலைவர் வெங்கையா ஏற்காததையடுத்து தமிழக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அதே போன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *