மார்க் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டிக்கிறோம்: கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும் மார்க் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டிக்கிறோம்: கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்
பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் அருகே காரைக்காலில் அமைந்துள்ள மார்க் என்ற தனியார் துறைமுகத்திலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதினால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் இன்னலுக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்தத் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் துகள்கள் அப்பகுதியில் வீடுகளிலும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உடல்ரீதியாகப் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
பொது மக்களுக்கு கேடு விளைவிக்கும் இந்தத் துறைமுகத்தை உடனே இழுத்து மூடக் கோரி மனிதநேய மக்கள் கட்சி உட்படப் பல அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் போராட்டங்களை நடத்திவந்த சூழலில் நேற்று நாகூர் பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர்கள் இத்துறைமுகத்திற்கு எதிராக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.ஜி.கே. நிஜாமுதீன் உட்பட நூற்றறுக்கணக்கனோர் இந்தப் போராட்டத்தில் ஈட்டுப்பட்டிருந்தபோது அவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதுடன் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது சம்பவத்தை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கு தீங்குவிளைவிக்கும் மார்க் துறைமுகம் ஏற்படுத்தும் மாசைத் தடுக்க திராணியற்ற தமிழக அரசு, ஜனநாயக முறையில் போராடியவர்களையும், அவர்களது போராட்டத்தையும் நசுக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது..
இப்போராட்டத்தில் ஈட்டுப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.ஜி.கே. நிஜாமுதீன் உட்படக் கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கோருகிறேன்.
2018-05-05