தருமபுரி மாவட்டம் சோகத்தூர் அருகே பக்கத்து வீட்டார் தன்னையும், தனது தந்தையையும் தாக்கியதால் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோகத்தூரை அடுத்துள்ள ஏ.ரெட்டிஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதையன். அவருக்கு லதா என்ற மனைவியும் வித்யாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். வித்யாஸ்ரீ அப்பகுதியில் உள்ள கல்லூரி எம்.எஸ்.சி. படித்து வந்தார். இந்நிலையில் மாதையனுக்கும், அவரது வீட்டிற்கு அருகே உள்ள ராஜேந்திரன் குடும்பத்தினருக்கும் ஒரு அடி நிலம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஞாயிறன்று நடந்த தகராறில் ராஜேந்திரனின் மகன் நிர்மல்குமார், வித்யாஸ்ரீயையும், மாதையனையும் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதுகுறித்து மாதையன் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததார். ஆனால் வழக்குப்பதிவு செய்யாத போலீசார், இருதரப்பினரையும் அழைத்துப்பேசி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். ஆனால் நிர்மல்குமார் தாக்கியதால் மனவேதனையில் இருந்த வித்யாஸ்ரீ, தனது வீட்டில் யாரும் இல்லாத நேரம், உடலில் மண்ணெண்ணய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தோர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை வித்யாஸ்ரீ உயிரிழந்தார். இதுகுறித்து தருமபுரி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.