நீதித்துறை விவகாரங்களில் அரசோ, அரசியல் கட்சிகளோ தலையிடக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தனியார் ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் நடவடிக்கைகளை மூத்த நீதிபதிகள் 4 பேர் விமர்சித்தது குறித்த கேள்விக்குப் பதில் அளித்தார். அப்போது, இந்த விவகாரத்தில் அரசும், அரசியல் கட்சிகளும் ஒதுங்கியிருக்க வேண்டியது அவசியம் என பிரதமர் தெரிவித்தார். கடந்த காலங்களில் நீதித்துறை மிகச் சிறப்பாக இருந்ததாகக் கூறிய நரேந்திர மோடி, தற்போதும், மிகச் சிறந்தவர்கள் அதில் இருப்பதாகக் குறிப்பிட்டார். எனவே, இந்த பிரச்னைக்கு ஒன்றாக அமர்ந்து தீர்வு காணும் திறன் நீதிபதிகளுக்கு இருப்பதாகவும் நரேந்திர மோடி நம்பிக்கைத் தெரிவித்தார்.