நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பயங்கர சூறைக்காற்றுடன் ஓகி புயல் தாக்கியதில் குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்கள் முடங்கின. மேலும் கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் முறிந்தன. இந்த புயலால் பெண் உள்பட 5 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கனமழையின் காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து கடலோரப்பகுதிகளில் கடல்சீற்றம் காணப்படுவதால், மீனவ கிராம மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறி வருகின்றனர். இதனிடையே , இடலாக்குடி அருகே செல்போன் கோபுரம் சாய்ந்து விழுந்துள்ளதையடுத்து மீட்புப்பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்துள்ளனர்.
இதனிடையே வங்கக் கடலில் அந்தமான் அருகே மேலும் ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளதாகவும் அது மேலும் வலுப்பெற்று தென் மேற்கு அல்லது வட மேற்கு திசையில் பயணித்து தமிழக கடலோரப் பகுதிக்கு வந்தால்தான், அது புயலா என்று கணிக்க முடியும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். அது புயலாக மாறினால் இந்தியா சூட்டியுள்ள ‘சாகர்’என்ற பெயரில் அழைக்கப்படும்.