தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவினர் 2-வது நாளாக ஆய்வு நடத்தினர். டெங்கு பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஷ்வினி குமார் சவுபே இன்று சென்னை வருகிறார்.
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மத்தியக் குழுவைச் சேர்ந்த மருத்துவர் சுவாதி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் கனகராஜிடம் கேட்டறிந்தார். அப்போது கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 500 பேர் டெங்கு காய்ச்சல் சிகிச்சை பெற்றுள்ளதாக கூறிய அவர், சேலம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் இது வரையில் 14 பேர் இறந்துள்ளதாகத் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்தியக் குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.மேடவாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் வந்த அவர்கள் பொதுமக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு எவ்வாறு தரப்படுகிறது என்றும், டெங்கு நோய்க்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். (காஞ்சிபுரம்)
இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக்குழு தலைவர் அசுதோஷ் பிஸ்வாஸ், தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து டெங்குவை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது என்று தெரிவித்தார். இருப்பினும் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும் என்று கூறிய அவர், மக்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் நீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்நிலையில், டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அஷ்வினிகுமார் சவுபே இன்று சென்னை வருகிறார். இன்று காலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், டெங்குவை தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்து அவர் கேட்டறியவுள்ளார். இதனிடையே, டெங்கு ஒழிப்புக்கு மத்திய அரசிடம் தமிழக அரசு 256 கோடி ரூபாய் கேட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.