தமிழகத்தின் ஊரகப்பகுதி நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறக்க அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் மதுக்கடைகளை மூடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 500 மீட்டருக்குள் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. தமிழகத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. தேசிய நெடுஞ்சாலைகளை, மாநில நெடுஞ்சாலைகளாக மாநில அரசுகள் மாற்றக் கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக் காட்டி தமிழகத்தில் புதிதாக மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவை மீறி மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபானக் கடை திறக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அதைத் தவறாகப் புரிந்துகொண்டு தமிழக அரசு செயல்படுவதாகவும், மாநில நெடுஞ்சாலைகளாக மாற்றி புதிய மதுக்கடைகளை தமிழக அரசு திறந்து வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள தேசிய மாநில சாலைகளில் புதிய மதுக்கடைகளை திறக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து, தமிழகத்தில் நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றி மதுக்கடைகள் திறப்பதற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று, நெடுஞ்சாலைகளை ஊரக சாலைகளாக மாற்றி மதுக்கடைகள் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. எழுத்துப்பூர்வமான தீர்ப்பு ஓரிரு நாளில் வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் சுமார் ஆயிரம் கடைகள் புதிதாக திறக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *