ஜம்மு-காஷ்மீரில் காவலரைக் கடத்திக் கொன்ற தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு அருகே கத்துவாவில் காவலர் பயிற்சிக்காக சென்றிருந்த முமது சலீம் குல்காமில் ((Kulgam)) உள்ள தனது வீட்டிற்கு விடுப்பில் வந்திருந்தார். வீட்டில் இருந்த போது தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சலீமின் உடல் குண்டு துளைத்த நிலையில் வயல்வெளியில் மீட்கப்பட்டது.
இந்நிலையில், காவலரை கடத்திக் கொன்ற தீவிரவாதிகள் குல்காம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, ஜம்மு காஷ்மீர் போலீசார், மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மோதலின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று தீவிரவாதிகளும் காவலர் சலீமைக் கடத்திக் கொன்ற குழுவைச் சேர்ந்தவர்கள் என ஜம்மு காஷ்மீர் காவல்துறை டிஜிபி எஸ்.பி.வைத் ((Shesh Paul Vaid)) தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.