சென்னை காவேரி மருத்துவமனை முன்பு திரண்ட தி.மு.க. தொண்டர்கள் விடிய விடியக் கலைந்து செல்லாமல் அங்கேயே காத்திருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு தி.மு.க. தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது முதல் 3 நாட்களாக ஏராளமான கட்சித் தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்திற்கு வந்து, பல மணி நேரம் அங்கேயே காத்திருந்துவிட்டுப் புறப்பட்டுச் செல்கின்றனர்.
கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக நேற்று இரவு தகவல் பரவியதும், மீண்டும் ஏராளமான தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு குவிந்தனர். தடுப்புகளைப் போட்டு போலீசார் கட்டுப்படுத்த முயன்றும், நேரம் செல்லச் செல்ல அவர்கள் வந்தவண்ணம் இருந்தனர்.
கூட்டம் அலைமோதியதால் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்குள் செல்வதற்கும், வெளியில் வருவதற்கும் நீண்டநேரம் ஆனது.
கருணாநிதியின் உடல்நிலை சீரடைந்துள்ளதாக அழகிரி, கனிமொழி ஆகியோர் தெரிவித்தபோதும், ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டபோதும் அங்கிருந்த தொண்டர்கள் கலைந்து செல்லாமல் காத்திருந்தனர். இதனால் போலீசார் மைக் மூலம் தொண்டர்களைக் கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.
விடிய விடிய காத்திருந்த தொண்டர்கள், எழுந்துவா தலைவா எழுந்துவா என நீண்ட நேரம் முழக்கமிட்டபடியே இருந்தனர்.
அதிகாலையில்தான் தொண்டர்கள் கலைந்து செல்லத் தொடங்கினர். இருப்பினும் காலையில் தொண்டர்கள் வருகை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.
இதையொட்டி, பேரிகார்டுகளை அமைத்து ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இரவு ஒரு மணியளவில் மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மருத்துவமனைக்கு வந்து பாதுகாப்புப் பணிகளைப் பார்வையிட்டார்.