இந்தோனேசியா விமானம் கடலில் விழுந்து விபத்தில் 189 பேரும் உயிரிழந்திருக்கலாம் என மீட்புப் படையினர் தகவல்

இந்தோனேசியாவின் சுமத்ரா கடலில் விழுந்த லயன் ஏர் விமானத்தில் சென்ற பயணிகள் உள்பட 189 பேரும் உயிரிழந்திருக்கலாம் என மீட்புப் படையினர் தெரிவித்துள்ள நிலையில், அந்த விமானத்தை இயக்கியவர் இந்திய விமானி என்பது தெரியவந்துள்ளது.

இந்தோனேசியா தலைநகர் ஜகர்தாவில் இருந்து இன்று காலை 6.20 மணியளவில் 181 பயணிகள், 6 பணிப்பெண்கள், 2 விமானிகள் ஆகிய 189 பேருடன் பங்கல் பினாங்க் பகுதிக்கு லயன் ஏர் நிறுவனத்தின் விமானம் சென்றது.

லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் 8 என்ற ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம் புறப்பட்ட 13வது நிமிடத்தில், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்ததால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். காலை 7.20 மணிக்கு பங்கல் பினாங்க் பகுதிக்கு சென்றிருக்க வேண்டிய நிலையில், ஏழரை மணியை கடந்தும் விமானம் இலக்கை அடையாததால், அதிகாரிகள் தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

சிறிது நேரத்தில் அந்த விமானம், சுமத்ரா கடல்பகுதியில் விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இதையடுத்து, 250க்கும் மேற்பட்ட மீட்புக்குழுவினருடன் கப்பல்கள் மற்றும் படகுகள், விமானம் விழுந்த பகுதிக்கு விரைந்தன.

சுமத்ரா கடல் பகுதியில் அந்த விமானத்தின் பல்வேறு பாகங்களும், இருக்கைகளும், பயணிகள் ஒரு சிலரின் பைகளும் மிதந்ததை மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர். அது தொடர்பான புகைப்படங்களையும், விமானத்தில் பயணித்தோரை தேடும் பணி தொடர்பான வீடியோவையும், இந்தோனேசிய பேரிடர் மேலாண்மை முகமை வெளியிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *