சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோர் தங்களது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளாவிட்டால், கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியை சுற்றியுள்ள ஹரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் விவசாயிகள் அறுவடைக்குப் பிறகு, பயிர்க்கழிவுகளை தீயிட்டு கொளுத்துகின்றனர். இதனாலேயே டெல்லியில் காற்றுமாசு ஏற்படுவதாக குற்றஞ்சாட்டப்படும் நிலையில், டெல்லி மற்றும் புறநகரில் நடைபெறும் கட்டுமானப் பணிகளும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
இதையடுத்து, பயிர்க்கழிவுகளை சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் முறையாக அகற்ற அறிவுறுத்தி வரும் மத்திய அரசு, கட்டுமானப் பணிகளால் காசு மாசுபாட்டை தவிர்க்கவும் விதிகளை வகுத்துள்ளது. இந்நிலையில், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோர், தங்களது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோர் தங்களை திருத்திக் கொள்ளாவிட்டால், அவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.