ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் சசிதரன் – ஆதிகேசவலு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், ஹெல்மெட் அணியாமல், 100க்கும் மேற்பட்டவர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சட்டம் அனைவருக்கும் சமம் என்ற வகையில், அமைச்சரின் செயலும் குற்றமானது என்பதால், புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. இதேபோல், சட்டவிரோதமாக, ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமைச்சர் விஜய பாஸ்கர் மற்றும் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 17 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.