மலேசியாவின் புதிய பிரதமர் மஹாதீர் முஹம்மதிற்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து! மலேசியாவில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராக பதவியேற்றுள்ள மஹாதீர் முஹம்மது அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் .எம்.எச். ஜவாஹிருல்லா அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி:
மலேசியாவில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் தங்களின் தலைமையிலான கூட்டணி வரலாற்றுச் சிறப்பு மிகுந்த வெற்றியைப் பெற்றுள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். உலகில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களில் மிக வயது மூத்தவர் என்ற சிறப்பை நீங்கள் பெற்றுள்ளீர்கள்.முன்னதாக, 24 ஆண்டுகள் மலேசிய நாட்டின் பிரதமராக இருந்து நாட்டை உலக அரங்கில் வளர்ச்சி அடையச் செய்தீர்கள். உங்களது ஆட்சிக் காலத்தில் தான் மலேசியா ஆசியாவின் பொருளாதார வலிமை வாய்ந்த நாடாக மாறியது என்றால் அது மிகையாகாது. தற்போது மீண்டும் மலேசியாவின் வளர்ச்சிக்காகவும், அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராகவும் 92 வயதிலும் துணிச்சலுடனும், தைரியத்துடனும் களம் கண்டு வெற்றிவாகை சூடியுள்ளீர்கள்.மலேசியாவில் வாழும் அனைத்து இனக்குழுக்களை ஒன்றிணைத்து, அரவணைத்து இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது பாராட்டுக்குரியது.உங்களின் இந்த வெற்றி மலேசியாவிற்கு மட்டுமின்றி உலகின் சட்டாம்பிள்ளையாக விளங்கும் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற ஏகாதிபத்திய நாடுகளை எதிர்க்கும் நபர்களுக்கு உற்சாகம் அளிக்கக்கூடியதாக இருக்கிறது.
மலேசிய மக்களின் மனங்களை எட்டிப்பிடித்து மீண்டும் பிரதமராகப் பதவியேற்றிருக்கும் உங்களுக்கும் துணை பிரதமர் வான் அஜீஸாவிற்கும் உங்கள் கூட்டணியில் உள்ள முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹீம் உள்ளிட்ட தலைவர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்”.
2018-05-11