சென்னையில் மனைவியை பெல்டால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தற்கொலை என்று நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவிக நகர் அண்ணா தெருவைச் சேர்ந்த கல்பனா என்ற பெண், கடந்த 11 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது கணவர் சுரேஷ், திருவிக நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கல்பனாவின் உடலைக் கைப்பற்றி, போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், கல்பனா கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, சுரேஷைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வேறொரு பெண்ணுடன் தொடர்பிருப்பதாக கூறி, தன்னுடன் மனைவி கல்பனா அடிக்கடி சண்டையிட்டு வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்து கழுத்தை நெரித்து தாமே கொன்றுவிட்டதாகவும் போலீசாரிடம் சுரேஷ் ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து சுரேஷை போலீசார் கைது செய்தனர்.