இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணம், தொடர் கனமழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது. 45 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து வெளியேறியுள்ளனர்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத் தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா, யாழ்பாணம் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அந்த ஐந்து மாவட்டங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாங்குளம், இரணைமடு உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன.
குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் 14 ஆயிரம் குடும்பத்தினர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். இடுப்பளவு தேங்கியுள்ள தண்ணீரால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
வெள்ளப்பெருக்கால், முல்லைத் தீவுக்குச் செல்லும் முக்கிய சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால்
வாகனப் போக்குவரத்து சவாலாகியுள்ளது.
வெள்ளத்தில் சிக்கியவர்களில், 8 ஆயிரத்து 539 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் 52 நலவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராணுவமும், கடற்படையும் இணைந்து வெள்ள மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. ஹெலிகாப்டர்கள், விமானங்கள், படகுகள் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.