மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை சிவானந்த காலனியில் முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தியின் நூற்றாண்டு நிறைவு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர், மனித நேய மக்கள் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இவ்விழாவில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஒடுக்கப்பட்டோருக்கு தனி திட்டத்தை உருவாக்கியவர் அன்னை இந்திரா காந்தி என்று புகழாரம் சூட்டினார். மேலும் மதவாத சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் உரிமைகளை தமிழக அரசு இழந்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் மதச்சார்பற்ற ஆட்சி மத்தியிலே உருவாக வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
பின்னர் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர், குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மக்கள் மத்தியில் பிரதமர் மோடியில் செல்வாக்கு குறைந்து வருவதாக கூறினார்.