பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் பாரம்பரிய நடைமுறைப்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஏழு வாயில்களும் ஞாயிற்றுக்கிழமை அன்று மூடப்படுகின்றன.
உயர் நீதிமன்றத்தின் வளாகத்தை அனைவரும் பயன்படுத்தினாலும், யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் ஆண்டுக்கு ஒரு நாள் மூடுவது வழக்கம். அதன்படி, உயர் நீதிமன்றத்தின் ஏழு வாயில்களும் 8ம் தேதி இரவு 8 மணி முதல் 9-ம் தேதி இரவு 8 மணி வரை மூடப்படும் என்று உயர் நீதிமன்ற நிர்வாகப் பதிவாளர் தேவநாதன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் நகல் அனைத்து வாயில்களிலும் ஒட்டப்பட்டுள்ளது. கன்னிகாபரமேஸ்வரி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உயர்நீதிமன்றம் கட்டப்பட்டதால் அதன் சாவி கோவிலில் வைக்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.