பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு உதவுவதற்காகவே பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்து இரண்டு ஆண்டுகளாகி விட்ட நிலையில் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையால் மீட்கப்பட்ட கருப்பு பணம் எவ்வளவு என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. நேற்றைய தினத்தை கருப்பு தினமாக அனுசரித்த காங்கிரஸ் கட்சி பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தியது.
பல லட்சம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீதான மிகப்பெரிய கொடூரத் தாக்குதல் இது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஏராளமான சிறுதொழில்கள் அழிந்துவிட்டதாகவும், அதிர்ச்சியிலும் வங்கி ஏடிஎம் வரிசைகளிலும் பலர் உயிரிழந்ததையும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் நண்பர்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக்கிக் கொள்வதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இதனிடையே பணம் மதிப்பிழப்பு நடவடிக்கையின் இரண்டாம் ஆண்டையொட்டி தமது முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லீ, பொருளாதாரத்தை முறைப்படுத்த பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை உதவியதாக தெரிவித்துள்ளார்.
ரொக்க கையிருப்பு வைத்திருந்தவர்கள் அதனை வங்கியில் செலுத்தும் நிர்ப்பந்தம் எழுந்ததையும் இதனால் வங்கிகளில் பணப்பரிவர்த்தனை முறைப்படுத்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 17 லட்சத்திற்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டதாகவும் அருண் ஜேட்லீ தெரிவித்துள்ளார்.