பாரத ஸ்டேட் வங்கி, வாடிக்கையாளரின் குறைந்தபட்ச கணக்கு இருப்புத் தொகையாக இருந்த 500 ரூபாயை, சமீபத்தில் 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டது. அதன்படி, நகர்புறக் கிளைகளில் கணக்கு வைத்திருந்தால் 5 ஆயிரம் ரூபாய், துணை நகரங்களில் 3 ஆயிரம் ரூபாய் மற்றும் 2 ஆயிரம் ரூபாய், கிராமப்புறங்களில் ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது. இதனால், வாடிக்கையாளர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்நிலையில், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கின் குறைந்தபட்ச இருப்புத் தொகையை குறைத்து, ஸ்டேட் வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, நகர்புறம் மற்றும் துணை நகரம் ஆகியவை இணைக்கப்பட்டன. அதன்படி, இவ்விறு பிரிவுகளில் வங்கி கணக்கு உள்ள வாடிக்கையாளரின் குறைந்தபட்ச இருப்புத் தொகை 3 ஆயிரம் ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், மக்கள் பயன்பாட்டிற்கு தாராளமாக கிடைக்கும் வகையில், புதிய 200 ரூபாய் நோட்டுகளை அதிகளவில் அச்சிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் 40 கோடி புதிய 200 ரூபாய் நோட்டுகள் அச்சிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.