சென்னையில் 3 நாட்களாக நடைபெற்று வந்த செவிலியர் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்; நீதிமன்ற உத்தரவை ஏற்று இன்று பணிக்கு திரும்புவதாக அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, செவிலியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு டிஎம்எஸ் வளாகத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்களாக டி.எம்.எஸ். வளாகத்தில் செவிலியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 90 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்த நிலையில், அதன் பின்னரும் கலைந்து செல்ல மறுத்து, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனிடையே, ஆவடியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியின் அமர்வு, செவிலியர்கள் உடனடியாக போராட்டத்தைக் கைவிட உத்தரவிட்டது. அரசு தரப்பில் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் ஆணையிட்டனர். பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என ஆணையிட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர். உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து செவிலியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு டிஎம்எஸ் வளாகத்தில் இருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *