கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஜெய்லஸ், மெல்டன், விஜய், நவின் உள்ளிட்ட 4பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் மீனவர்களின் 2 விசைப்படகுகளை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை மன்னார் துறைமுகத்திற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் மீனவ மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது.