குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் அந்த வீட்டை வாடகைக்கு விட்டால், ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடிசை வீடுகளின் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டப்பட்டு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒதுக்கப்படுகிறது. வீடு கிடைக்கப் பெற்றவர்கள் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு மீண்டும் குடிசையிலே வசிப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில், சென்னை ஓட்டேரி கொன்னூர் சாலையை ஆக்கிரமித்து குடிசை பகுதியில் வசிப்பவர்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த தடை விதிக்க கோரி 60 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் நீர்வழிப் பாதை ஆக்கிரமிப்புகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று கூறி கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் தகுதியானவர்களுக்கு 5 நாட்களில் மாற்று இடத்தை வழங்க வேண்டும் என்றும், சாவி வாங்கிய 5 நாட்களில் ஆக்கிரமிப்பு இடத்தை காலி செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குடிசைமாற்று வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளவரின் புகைப்படம் மற்றும் விவரங்களை வீட்டில் ஒட்ட வேண்டும் என்றும் , வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தங்கள் விவரங்களை அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். அந்த விவரங்களை அதிகாரிகள் சரிபார்த்து அதில் தவறுகள் இருந்தால் ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று குடிசை மாற்று வாரியத்திற்கு நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.