போக்குவரத்து துறை ஓய்வூதியர்களுக்கு 204 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை இன்றைய தினத்திற்குள் வழங்க வேண்டும்; தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…

போக்குவரத்து துறை ஓய்வூதியர்களுக்கு 204 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை இன்றைய நாளுக்குள் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த மாயாண்டி என்ற 82 வயது முதியவர் நீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். இந்தக் கடிதத்தை நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்காக எடுத்துக் கொண்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஒய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய தொகையில் இரண்டாவது தவணையான 379 கோடி ரூபாயை டிசம்பர் 15ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 379 கோடி ரூபாயில் முதல் தவணையாக 175 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரண்டாவது தவணையான 204 கோடி ரூபாயை அரசாணை பிறப்பித்து, இன்றைய நாளுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். மேலும் ஜனவரி 15ம் தேதிக்குள் 3வது தவணை தொகையை வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஜனவரி 3ம் தேதி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *