திருவள்ளூர் மாவட்டம் தீர்த்தக்கரையம்பட்டில் 2001ம் ஆண்டு அக்டோபரில் கள்ளச்சாராயம் குடித்த 35 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக 19பேர் மீதான வழக்கு பொன்னேரி விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2011ல் தீர்ப்பளித்த நீதிமன்றம், சந்தேகத்திற்கு இடமின்றிக் குற்றத்தை நிரூபிக்கக் காவல்துறையினர் தவறி விட்டதாகக் கூறி 19 பேரையும் விடுவித்தது. இதை எதிர்த்து காவல்துறையினர் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம், குற்றத்தை நிரூபிக்க அரசு தவறி விட்டதால், துரதிருஷ்டவசமாக விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்வதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறி, மேல் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. கள்ளச்சாராயத்தால் 35பேர் உயிரிழந்ததற்கு வேதனை தெரிவித்த நீதிபதி, கள்ளச்சாராயத்தைத் தடுக்கும் சட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினார். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள், தங்கள் கவனக்குறைவை உணர்ந்து மனச்சாட்சியிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
2018-01-28