மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி உட்பட நான்கு பேரை தமிழக காவல்துறை கைது செய்துள்ளதை எதிர்த்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்
இன்று கதிராமங்கத்தில் முன்னறிவிப்பில்லாமல் ஒஎன்ஜிசி நிறுவனத்தினர் பெட்ரோல் கிணறு பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கேட்க வந்த மீத்தேன் எதிர்ப்பு இயக்கத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினரை காவல்துறை கைது செய்துள்ளது.
டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடிவரும் நிலையில், எந்தவித அறிவிப்பும் இன்றி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தார் செய்துள்ள செயல் அப்பகுதி மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.
விவசயாத்திற்கும், பொதுமக்களின் வாழ்வாதரத்திற்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற நாசகார திட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் மக்களின் குரல் வலையை மத்திய-மாநில தொடர்ந்து நெறித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது.
எனவே, பேராசிரியர் ஜெயராமன் மற்றும் அவரது குடும்பத்தினரையும் தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.