ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்- கே.எம்.காதர் மொகிதீன்

ஓரினச்சேர்க்கை குற்றமல்ல என்ற உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 31 நீதிபதிகள் அடங்கிய குழுவிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள்  ஆர்.எஃப் நாரிமன் , ஏ.எம். கன்வில்கர், சி.ஒய். சந்திரசூட்,இந்து மல்கோத்ரா ஆகிய ஐவர் அடங்கிய இந்திய அரசியல் சாசன அமர்வு இன்று (06-09-2018) இந்திய குற்றவியல் சட்டம் (ஐ.பி.சி) பிரிவு 377-ஐ நீக்கி தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

ஓரினச் சேர்க்கையை குற்றம் என்று கூறிய 377-வது சட்டப் பிரிவை ரத்து செய்து ஓரினச் சேர்க்கை செல்லும். ஓரினச் சேர்க்கை  குற்றமில்லை. இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல. சமுதாயம் மாறினால் தான் முன்னேற்றம் அடையும். மாற்றங்களை சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்னும் அறிவுரையோடு இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது இந்திய மக்களின் வரலாற்றை திசை திருப்பி இருப்பது மட்டுமல்ல இந்திய பண்பாட்டை தீர்த்து கட்டியிருக்கும் தீர்ப்பாகவும் இது அமைந்து இருக்கிறது.

 

அமெரிக்காவில் 19 மாநிலங்களும் ஐரோப் பாவில் சில நாடுகளும் தெற்காசியாவில் தைவான் உள்பட சில பகுதிகளிலும் ஓரினச் சேர்க்கைக்கு பச்சைக் கொடி காட்டி இருக்கிற வரலாறு உலகத்தின் பெரு வாரியான மக்களால் எள்ளி நகையாடப்பட்டு வருகிறது.

இப்பொழுது இந்தியாவையும் உலக மக்களின் ஏளனத்துக்கும், ஏசலுக்கும் உட்படுத்துகிற ஒரு பாதகமான பாவச் செயலை உச்சநீதிமன்றம் செய்து இருக்கிறது.

 

இந்த தீர்ப்பு இந்திய மக்களின் பெரும்பாலாக உள்ளவர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பாகும். இந்த தீர்ப்பை இந்திய மக்கள் ஒருபோதும் ஏற்கவும் மாட்டார்கள். ஒப்பவும்  மாட்டார்கள். ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள்.

நாகரிகத்தின் பெயரால், அழுகிப்போன மேல்நாட்டு கலாச்சாரத்தை ஏற்று இந்திய மக்களின் அழிவுக்காக இந்த தீர்ப்பு வந்திருக்கிறது என்பது தான் உண்மையாகும்.

ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் வரம்புகளோடும், வரன்முறை களோடும், வாழ்க்கை வாழ்வது தான் இயற்கையான வாழ்க்கை. அந்த இயற்கையான வாழ்க்கையை நிலைகுலைக்கிற தீர்ப்பு இது.

 

உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்திய மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை. ஆகவே, உச்சநீதிமன்றத்தில் உள்ள 31 நீதிபதிகளும் அடங்கிய முழு அமர்வுக்கு இந்த வழக்கு மேல் முறையீடு செய்யப்படுதல் வேண்டும்.

நீதியற்ற தீர்ப்பை நீதிபதிகள் வழங்கி இருக்கிறார்கள். இந்திய நீதி திசை மாறி இருக்கிறது. தடுமாறி இருக்கிறது. தடம்புரண்டு இருக்கிறது. தரம் தாழ்ந்து இருக்கிறது. இந்திய பாரம்பரியத்தின் பெருமையையும், சிறப்பையும், பாதுகாக்கிற வகையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு அதோடு இணைந்து அனைத்து மாநில அரசுகளும் மேல் முறையீட்டுக்கு வழிவகை காண வேண்டும்.

 

நீதி குலையும் போது நாகரிகங்கள் அழிந்திருக்கின்றன என்னும் வரலாற்று உண்மையை நீதிபதிகளும், ஆட்சியில் உள்ளவர்களும் எண்ணிப் பார்த்து தமது கடமையை  செவ்வையான முறையில் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *