வரும் அக்டோபர் 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் தொடர்ந்து நிலவி வருவதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக பகுதிகளில் வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாலும், வெப்பச் சலனத்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் 6 செண்டி மீட்டர் மழையும், நாங்குநேரியில் 5 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக கூறும் வானிலை மையம், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அறிவித்துள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை வரும் 26ஆம் தேதி தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதாகவும், அன்றைய தேதியில் தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.