மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 க்கும் அதிகமாக இடங்களை கைப்பற்றி உள்ளது. 303 இடங்களில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து 16 வது மக்களவையை குடியரசுத் தலைவர் கலைத்து உத்தரவிட்டார். இதையடுத்து டெல்லியில் நடைபெற்ற பாஜக. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் பாஜக. நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், பாஜக நாடாளுமன்றக் கட்சி தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ள கடிதத்தை குடியரசு தலைவரிடம் பாஜக தலைவர் அமித்ஷா வழங்கினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினரின் ஆதரவு கடிதங்களும் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவரை சந்தித்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி உரிமை கோரினார். அவரை ஆட்சியமைக்க குடியரசு தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி 30 ஆம் தேதி பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை, பிரதமர் மோடி இன்று காலை சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது.
ஆந்திர முதலமைச்சராக வரும் 30-ஆம் தேதி ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்கிறார். இந்நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு பல தலைவர்களை அழைக்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். அதன்படி தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவை சந்தித்து அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியை இன்று ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்தார். அப்போது அவரைக் கட்டித்தழுவி வாழ்த்துத் தெரிவித்தார். மோடியும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார். பின்னர், தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு, ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார்.