தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும், ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்கலாம் என்றும் என்றும் தருண் அகர்வாலா குழு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தியதை அடுத்து, அந்த ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையின் சாதக, பாதங்கள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான மூவர் குழுவை நியமித்தது.
தூத்துக்குடிக்கு வந்த அந்த குழுவினர், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மற்றும் ஊழியர்களிடம் கருத்து கேட்டனர். அதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கும் சென்று, பொதுமக்களிடம் கருத்து கேட்ட அவர்கள், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு தரப்பினரிடம் மனுக்களையும் பெற்றனர். அதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள மாநில பசுமைத் தீர்ப்பாயத்திலும் கூட்டம் நடத்தி, அரசியல் கட்சியினர், ஸ்டெர்லைட் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குழுவினரிடம் கருத்துகளைப் பெற்றனர்.
இந்நிலையில் டெல்லி சென்ற மூவர் குழு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான ஆய்வறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தது. அந்த ஆய்வறிக்கையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது என்றும், ஆலைக்கு உரிய முறையில் நோட்டீஸ் கொடுக்காமல் மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை முறையாக அகற்றுவதோடு, 10 நாட்களுக்கு ஒருமுறை நிலத்தடி நீரை ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ள தருண் அகர்வாலா குழு, ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்கலாம் என்றும் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆய்வறிக்கையை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தமிழக அரசு உரிய பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.