ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது – உச்சநீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதி அளித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகளால் காற்று, நிலம், நீர் என அனைத்தும் நஞ்சாவதாக தூத்துக்குடி பொதுமக்கள் நெடுநாட்களாக எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கடந்த மே 22ஆம் தேதி பெரும் போராட்டம் வெடித்து, போலீசார் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல்வைத்தது. இதற்கு எதிராக, ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகியது.

ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து அளித்த அறிக்கையை ஏற்று,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், நவீன் சின்ஹா அமர்வு வழக்கை விசாரித்தது.

தமிழக அரசு தரப்பு, வேதாந்தா தரப்பு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிட்டு கடந்த 7ஆம் தேதி ஒத்திவைத்தனர். அதன்படி இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழக அரசின் கோரிக்கை ஏற்று, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து ஆணையிட்டனர்.

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் என்ற  வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து விட்டது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசு ஆணை செல்லும் என்றும் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதேசமயம், இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி எனசட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசுக்கு கிடைத்த வெற்றி என கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், ஆலைத் தொழிலாளர்களின் எதிர்காலம் குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளார்.

பணத்தால் அரசியல் கட்சிகளை விலைகொடுத்து வாங்கிய ஸ்டெர்லைட் ஆலை இன்று நீதியின் முன் மண்டியிட்டு உள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *