வால்பாறை சுற்றுவட்டார மலை பகுதிகளில் நிலவி வரும் உறை பனி அடுத்த இரண்டு இரவுகள் தொடரும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நீலகிரி கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலை சார்ந்த பகுதிகளில் நேற்று பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளது.
குறைந்தபட்சமாக வால்பாறையில் 3 டிகிரி செல்சியஸ்-ம், குன்னூரில் 9.2 டிகிரி செல்சியஸ்-ம் கொடைக்கானலில் 10.5 டிகிரி செல்சியஸ்-ம் வெப்பம் பதிவாகியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும்,அதிகாலை நேரங்களில் லேசான பனி மூட்டம் நிலவும் என்றும் கூறியுள்ளது.
அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ்-ம், குறைந்தபட்சமாக 20டிகிரி செல்சியஸ்-ம் வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் ஆகிய பகுதிகளில் நிலவிய உறைபனியால் புல்வெளிகள் முழுவதும் வெள்ளைக் கம்பளி போர்த்தப்பட்டதுபோல காட்சியளித்தது. சாலைகள், வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பரப்பு ஆகியவற்றிலும் உறைபனி படர்ந்திருந்தது.
கடும் பனிப் பொழிவால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் செடிகள் கருகின. இதையடுத்து, அரியவகை மலர்ச் செடிகளை பாதுகாக்கும் நடவடிக்கையில், பூங்கா நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.