வங்கக் கடலில் உருவான டிட்லி புயல் நாளை கரையைக் கடக்கிறது…

வங்க கடலில் உருவாகியுள்ள டிட்லி புயல், ஒடிசா- ஆந்திரா இடையே நாளை கரையைக் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலம் கோபால்பூரில் இருந்து 530 கிலோ மீட்டர் தென்கிழக்கிலும், ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினத்தில் இருந்து 480 கிலோ மீட்டர் தென்கிழக்கிலும் மத்திய வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருந்தது. இது “டிட்லி” புயலாக மாறியதாகவும், இன்று தீவிர புயலாக அது மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த டிட்லி புயல் வடக்கு நோக்கி நகர்ந்து, ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திராவை ஒட்டி அமைந்துள்ள கோபால்பூர் – கலிங்கபட்டினம் இடையே நாளை கரையைக் கடக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயலை சமாளிக்க ஒடிசா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அரசு ஊழியர்களின் விடுப்பு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தயார்நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு நாளை வரையும், மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு வரும் 13-ஆம் தேதி வரையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அடுத்த 24 மணி நேரத்தில் உள் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

வங்கக்கடலில் டிட்லி புயல் உருவானதை அடுத்து சென்னை எண்ணூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், ராமேஸ்வரம், நாகை உள்ளிட்ட துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *