ரயில் புறப்படுவதற்கு இருபது நிமிடத்துக்கு முன்பே பயணிகள் ரயில் நிலையத்துக்குச் செல்லும் வகையில் புதிய பாதுகாப்புத் திட்டத்தை ரயில்வே துறை உருவாக்கி வருகிறது.
ரயில் பயணத்தைப் பாதுகாப்பானதாக ஆக்குவதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என ரயில்வே துறை ஆராய்ந்து வருகிறது.
அதன்படி முதன்மையான ரயில் நிலையங்களில் ரயில் புறப்படுவதற்கு இருபது நிமிடத்துக்கு முன்பே பயணிகள் உள்ளே சென்றுவிட வேண்டும். அதன்பின் வரும் பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் இந்தப் புதிய பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
கர்நாடக மாநிலம் ஊப்ளி உள்ளிட்ட 202 முதன்மையான ரயில் நிலையங்களில் இந்தப் பாதுகாப்பு முறையை நடைமுறைப்படுத்த ரயில்வே திட்டமிட்டு வருகிறது.
இதற்காக அந்த ரயில் நிலையத்தைச் சுற்றிலும் மதில் கட்டப்படும். வாயில்களில் காவலுக்கு நிற்கும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பயணிகளைச் சோதனையிட்ட பின்னரே ரயில் நிலையங்களுக்குள் செல்ல அனுமதிப்பர். ஒருங்கிணைந்த பாதுகாப்பு முறை என அழைக்கப்படும் இந்தத் திட்டம் 385கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.