மத்திய அரசைக் கண்டித்து, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடத்தி வரும் தர்ணா போராட்டம் இன்று மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது.
சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்டவரும், தற்போதைய கொல்கத்தா காவல் ஆணையருமான ராஜிவ் குமாரை விசாரணை செய்ய சி.பி.ஐ. முடிவு செய்தது. இதற்காக அவரது வீட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகளை அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை முதல் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். இந்தப் போராட்டம் 3வது நாளாக நீடித்து வருகிறது.
இதனிடையே, சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் 2 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சாரதா நிறுவன மோசடி குறித்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் விசாரணை நடத்த தடை விதித்ததன் மூலம் நீதிமன்றத்தை மேற்கு வங்க அரசு அவமதித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்க தலைமை செயலாளர், காவல்துறை டிஜி.பி, கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் ஆகியோர் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பை தரவில்லை என்றும் சிபிஐ குற்றம் சாட்டி உள்ளது.நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா ஆணையர் உடனடியாக சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சரணடையக் கோரும் மனுவையும் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது. இந்த இரு மனுக்களும் இன்று விசாரணைக்கு வர உள்ளன.