மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 10 நாட்களுக்குள் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யாவிட்டால் முதலமைச்சரையே மாற்றிவிடப் போவதாக அறிவித்துள்ளார். மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முன்பு உஜ்ஜெயினியில் உள்ள மஹாகாலேஸ்வரர் ஆலயத்தில் ராகுல் காந்தி வழிபாடு மேற்கொண்டார்.
அதன்பின்பு ஜாப்வா, தார், இந்தூர், அம்பேத்கர் பிறந்த மவ் உள்ளிட்ட இடங்களில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அங்குள்ள ஷிப்ரா நதியைத் தூய்மைப்படுத்த ரூ.400 கோடி ஒதுக்கியுள்ளதாகவும், ஆனால் ஒரு அமைச்சர் சென்று அந்த நதியில் நீரைப் பருகினால், அங்கேயே அவர் நினைவிழந்து மயங்கிவிடுவார் எனவும் ராகுல் காந்தி விமர்சனம் செய்தார்.
மேலும் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், வந்த முதல் 10 நாட்களுக்குள் விவசாயிகளின் கடனை முதலமைச்சர் தள்ளுபடி செய்வார் என ராகுல்காந்தி அறிவித்தார். அவர் அவ்வாறு செய்யாமல் வேறு ஏதேனும் காரணங்களைக் கூறிக் கொண்டிருந்தால், வேறொரு முதலமைச்சர் விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தை நிறைவேற்றுவார் என ராகுல்காந்தி தெரிவிதித்துள்ளார்.