போலியான ஆபாச படங்களை வைத்து பெண்களை மிரட்டியதாக மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரளாவில் புகைப்பட ஸ்டூடியோவில் வேலை பார்க்கும் ஒருவர், அங்கு புகைப்படம் எடுக்க வந்த பெண்களின் முகத்தை வேறு ஆபாச படங்களோடு இணைத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
புகைப்பட ஸ்டூடியோவின் உரிமையாளரும் கடந்த செவ்வாய்கிழமையன்று கைது செய்யப்பட்டார்.
தங்கள் படங்களை தவறாக பயன்படுத்தி மிரட்டியதாக, சில பெண்கள் புகார் தெரிவித்ததையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது என பிபிசியிடம் பேசிய போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
தங்கள் முகங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலி ஆபாச படங்கள், சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள அந்த ஸ்டூடியோவில் வேலை செய்து வரும் நபர், திருமணம் மற்றும் குடும்ப விழா புகைப்படங்கள், வீடியோக்களை எடிட் செய்து வந்தார்.
ஸ்டூடியோ முன்பு சில பெண்கள் அவரை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
புகார்களை விசாரித்து வரும் நிலையில், ஸ்டூடியோ தற்போது மூடப்பட்டுள்ளது என்றும் போலீஸார் தெரிவித்தனர்.