பெட்ரோல், டீசல் விலை நூறு ரூபாயை நோக்கி உயர்ந்து வரும் நிலையில், விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது குறித்து மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 88 ரூபாயாக உயர்ந்துள்ளது.
பெட்ரோல்- டீசல் விலை உயர்வால் வாகன கட்டணங்கள், ஆட்டோ, டாக்சி வாடகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் 2 ரூபாய் 50 காசுகள் பெட்ரோல்- டீசல் விலையைக் குறைத்தன. வாட் வரியைக் குறைக்குமாறு மத்திய அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று பாஜக ஆளும் 14 மாநில அரசுகளும் பீகார், பஞ்சாப் அரசுகளும் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை 2 ரூபாய் 50 காசுகள் குறைத்துள்ளன.
இந்நிலையில் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நிதியமைச்சர் அருண்ஜேட்லீ உள்ளிட்டோர் நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தனர். உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தல், எண்ணெய் நிறுவனங்களின் மானியம், எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
உள்நாட்டில் எண்ணெய் உற்பத்திக்காக 59 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் 55 எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமரிடம் தர்மேந்திர பிரதான் எடுத்துரைத்தார். ஈரானிடமிருந்து நவம்பர் 4ம் தேதிக்குள் அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்று அமெரிக்கா விதித்துள்ள கெடு குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.