பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே நீக்கம், இலங்கையின் பிரதமராக பொறுப்பு ஏற்றார் ராஜபக்சே

இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராகப் பதவியேற்றார். அவரது நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப் போவதாக அந்நாட்டு பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.

இலங்கையில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போது ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும், மைத்ரி பால சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் இணைந்து ஆட்சியை பிடித்தன.
இலங்கை அதிபராக சிறிசேனா பதவி வகித்து வரும் நிலையில், ரணில் விக்ரமசிங்கே பிரதமராகப் பதவி வகித்து வந்தார். போட்டிக் கட்சியாக இருந்தபோதும் நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் கூட்டணி அரசாங்கம் நடைபெற்று வந்தது. இருப்பினும், சமீபகாலமாக சிறிசேனா, ரணில் இடையே பனிப்போர் நிலவியது. இந்நிலையில், நேற்று மாலை ரணில் அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி திடீரென அறிவித்தது.

இதையடுத்து, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை புதிய பிரதமராக சிறிசேனா நியமித்தார். அதிபர் மாளிகையில் நேற்று இரவு நடைபெற்ற நிகழ்ச்சியில் ராஜபக்சே பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.

ராஜபக்சே பதவியேற்றதை அவரது ஆதரவாளர்களான பொதுஜன பெரமுனா கட்சியினரும், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.

ஆனால், ராஜபக்சே நியமனம் சட்டவிரோதம் என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நீடிப்பதாகவும், அவரை பதவி நீக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் போராட்டம் நடத்த வருமாறு தொண்டர்களுக்கு அக்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ((தமக்கு)) நாடாளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதால், தாம்தான் பிரதமர் என்று சிறிசேனாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாதம் 5-ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது. அந்த கூட்டத்தில் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று அவரது கட்சியினர் கூறியுள்ளனர். ஆனால் இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின் 19-வது பிரிவின் படி ஆட்சியில் உள்ள பிரதமரை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்றும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தால் மட்டுமே பிரதமர் பதவி இழக்க நேரிடும் என்றும் ரணில் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். இதனால் இலங்கையில் அரசியல் சட்ட சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் சிறிசேனா மற்றும் ராஜபக்சே கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 95 மட்டுமே. அதேவேளையில், ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 106 உறுப்பினர்கள் உள்ளனர். தனிப்பெரும்பான்மைக்கு வெறும் 7 இடங்கள் மட்டுமே அக்கட்சிக்கு பற்றாக்குறையாக உள்ளது. இத்தகைய சூழலில், சிறிசேனா எடுத்திருக்கும் இந்த முடிவால், ஆளும் அரசு நீடிக்குமா அல்லது கவிழுமா என்பது தெரியவில்லை.

அதுமட்டுமன்றி, இலங்கை அரசியல் சாசன சட்டத் திருத்தத்தின் 19-ஆவது விதிகளின்படி, அந்நாட்டின் பிரதமரை பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவின்றி நீக்க முடியாது. அதன்படி பார்க்கும்போது, தற்போது விக்ரமசிங்கேவை தன்னிச்சையாக சிறிசேனா மாற்றியிருப்பது செல்லாது என்றும் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *