பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தி விருதுநகரில் போராட்டம்

பேரியம் நைட்ரேட் பயன்படுத்த விதித்துள்ள தடை, வெடிகள் வெடிப்பதற்கான கட்டுப்பாடு ஆகியவற்றை நீக்கக் கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டாசுத் தொழிலில் பேரியம் நைட்ரேட்டைப் பயன்படுத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதேபோல் சரவெடி தயாரிக்கக் கூடாது என்றும், தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே வெடிகள் கொளுத்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. பேரியம் நைட்ரேட் பயன்படுத்தத் தடை விதித்துள்ளதால் ஒளிரும் வகையைச் சேர்ந்த வெடிகள் தயாரிக்க முடியவில்லை. வெடிகள் கொளுத்தக் கட்டுப்பாடு விதித்துள்ளதால் பட்டாசுத் தொழிற்சாலைகள் 43நாட்களாக மூடப்பட்டுள்ளன.

இதனால் 5இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். தடைகளை நீக்கிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரிப் பட்டாசு ஆலைத்தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கன்னியாகுமரி – மதுரை நால்வழிச்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் இடத்தில் இரண்டாயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு ஆலைத் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார். போராட்டத்துக்குப் பின் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *