தமிழகத்தில் தீபாவளி நாளில், நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதன் அடிப்படையில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால், நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் ஏராளமானோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188 மற்றும் 285 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில், 343 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல், கோவையில் 184 பேர் மீதும், விழுப்புரத்தில் 160 பேர் மீதும், மதுரையில் 109 பேர் மீதும், திருவள்ளூரில் 105 பேர் மீதும், சேலத்தில் 100 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.