தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு உத்தரவு பிறப்பித்தது யார் என்பது தொடர்பான ஆவணங்களை தமிழக போலீஸாரிடமிருந்து பெற்று விசாரணை நடத்தி வருவதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது குறித்து சிபிஐ விசாரணை நடத்துமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சிபிஐ வழக்குகள் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின்போது பயன்படுத்தப்பட்ட 15 துப்பாக்கிகள் தொடர்பான ஆவணங்கள் பெறப்பட்டு, தொடர்புடைய காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ வட்டாரங்கள் கூறியுள்ளன.
யாருடைய உத்தரவின்பேரில் 15 துப்பாக்கிகள் விநியோகிக்கப்பட்டன, கையெழுத்திட்டு அந்த துப்பாக்கிகளை பெற்றுக்கொண்டது யார், யாருடைய உத்தரவின்பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்பது தொடர்பான ஆவணங்கள் தமிழக காவல்துறையிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.