துணைநிலை ஆளுநரை கண்டித்து புதுச்சேரி முதலமைச்சர் தர்ணா

புதுச்சேரியில், துணைநிலை ஆளுநரை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு உள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதை, சட்டத்தின் அடிப்படையில் தான் அமல்படுத்த வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் அறிவுறுத்தலின்படி, ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டு, காவல்துறை மூலம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கருப்பு சட்டை அணிந்தும், சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு துண்டு அணிந்தும் சட்டமன்றத்திலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அங்கு ஆளுநர் மாளிகை எதிரில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் பெருமளவில் ஆளுநர் மாளிகை முன்பு திரண்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்த அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு காணப்பட்டது.

முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெறும் தர்ணா காரணமாக ஆளுநர் மாளிகை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருப்பதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *