5 வயதுக்குட்பட்ட 72 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இதைத் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதற்காக 43 ஆயிரத்து 51 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில், போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார். குழந்தைகளுக்கு பொம்மைகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை அரசு மருத்துவமனையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த முகாமை தொடங்கி வைத்தார்.
கரூரில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இந்த முகாமை தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை முத்துநகர் கடற்கரையில், ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.
நெல்லையில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியில் இன்று 452 மையங்களில் 91 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.