சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிம வள பிரிவிலிருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 4 ஆயிரத்து 500 தனியார் தண்ணீர் லாரிகள் இயங்காததால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் பெரும்பாலும் குடிநீருக்காக தண்ணீர் லாரிகளையே மக்கள் நம்பி இருக்கும் நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்தால் விநியோகம் பெரிதும் பாதிக்கும் சூழல் எழுந்துள்ளது.
இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சென்னை குடிநீர் வாரியத்திடம் விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி ஒரு வாரத்திற்கு தேவையான குடிநீரை பொதுமக்கள் பெறலாம் என்று தெரிவித்தார். மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தண்ணீர் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். சென்னை குடிநீர் வாரிய நீர்நிரப்பு நிலையங்களிலிருந்து இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில், தங்களது லாரிகள் மூலமோ, அங்கீகரிக்கப்பட்ட லாரிகள் மூலமோ நுகர்வோர் குடிநீர் பெறலாம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.