சென்னை அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி அருகே ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூளைமேட்டைச் சேர்ந்த குமரேசன் என்பவர் மீது சேத்துப்பட்டு மற்றும் சூளைமேடு காவல் நிலையங்களில் கொலை வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு யுவராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குமரேசன் உள்ளிட்ட 8 பேர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பும் வழியில் வைஷ்ணவா கல்லூரி அருகே உள்ள ஒரு உணவகத்துக்குச் சென்றனர். அங்கு கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 5 முதல் 6 பேர் கொண்ட குழு நுழைந்ததை அடுத்து அனைவரும் சிதறி ஓடினர்.
இந்நிலையில் குமரேசனைத் துரத்திய அந்தக் கும்பல், வைஷ்ணவா கல்லூரில் வாயில் அருகே சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியதில் அவர் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
வைஷ்ணவா கல்லூரி வாயிலிலும், அதன் அருகில் உள்ள கனரா வங்கியிலும் உள்ள சி.சி.டி.வி.க்களில் கொலையாளிகள் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. அதனைக் கொண்டு சகாயராஜ் என்ற நபரையும் கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர். நேற்று சென்னை புளியந்தோப்பில் மற்றொரு ரவுடி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், சென்னை நகரில் கடந்த 24 மணி நேரத்தில் 4 கொலைகள் நடைபெற்றுள்ளன.